சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுது இந்த முட்டைகோஸ் வைத்து சுவையான மசாலா அரைத்து இந்த சாதத்தை செய்துவிட முடியும்.
முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அதிகம். முட்டைகோஸில் அதிக அளவில் விட்டமின் கே இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கும். இதனை காலையில் வடித்த மிஞ்சிய சாதத்தில் செய்து கொடுக்க மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கு பத்து நிமிடத்திற்கும் குறைவாகத்தான் நேரம் செலவாகும். முட்டைக்கோஸ் இருக்கா உங்க வீட்ல? அப்படினா யோசிக்காம நீங்க இந்த முட்டைகோஸ் சாதத்தை கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணும். நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது.
முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த மசாலா சாதத்தை இந்த முறையில் செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். சூப்பரான முட்டைகோஸ் மசாலா சாதம் ரெசிபி உங்களுக்காக.
முட்டைகோஸ் மசாலா சாதம் | Cabbage Masala Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கோஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 5 சில்லு தேங்காய்
- 3 பச்சை மிளகாய்
- 3 வரமிளகாய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 2 இஞ்சி சிறிய துண்டு
- 3/4 ஸ்பூன் உப்பு
- 8 முந்திரிப்பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 கொத்து கொத்தமல்லித் தழை
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் கோசை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 5 செல்லு தேங்காயைத் துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு துண்டு இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வரமிளகாயை இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
- பின்னர் முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்து விட்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கோஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சிறிது நேரம் இவை எண்ணெயிலேயே நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு இவற்றுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு மூடி ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வேகவைக்கவேண்டும்.
- பின்னர் மூடியை திறந்து கிளறி விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் இரண்டு கப் சாதம் சேர்த்து நன்றாக கிளறி விட்டால் போதும் சுவையான முட்டைகோஸ் சாதம் தயாராகிவிடும்.