தமிழ்நாட்டில் உணவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்துவமான உணவு வகைகளும், சமையல் முறைகளும் இருந்து வருகின்றன. ஒரே உணவை வெவ்வேறு வகைகளில் தயார் செய்து சாப்பிடும் பழக்கமும் இருந்து வருகிறது. அந்த வகையில் பன்முக கலாச்சாரத்தை கொண்ட தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மாநிலத்தின் பிற பகுதிகள், நாட்டின் பிற இடங்களை சேர்ந்த உணவு, கலாச்சாரம், பழக்கவழக்கம் என அனைத்தும் இருந்து வருகிறது. உணவை பொறுத்தமட்டில் சென்னைக்கு என தனித்துவமான உணவாக இருந்து வருவது வடகறி. பெரும்பாலான நபர்களுக்கு வடகறி என்றால் தெரியாது.
ஆனால் சென்னையில் பெரும்பாலான கடை மெனுவில் வடகறி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். சென்னையில் பிரபலமான உணவு என்றாலே வடகறி என கூறும் அளவுக்கு பிரமான ரெசிபியாக இருந்து வரும் சென்னை வடகறியை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என எல்லாவிதமான டிபன் வகைகளோடும் சேர்த்து உண்ணப்படும் இந்த உணவு வகை, சென்னை சைதாப்பேட்டையில் அதிகளவில் கிடைக்கும்.
இது, கடலைப்பருப்பு வடை அல்லது பகோடாவை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா கலவையோடுச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டுச் சலித்துப்போனவர்கள் சென்னை வடகறியை ட்ரை செய்யலாமே!
சென்னை வடகறி | Chennai Vada Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை பருப்பு
- 1/4 கப் உளுந்தம்பருப்பு
- 5 வர மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சோம்பு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 3 பெரிய வெங்காயம்
- புதினா சிறிதளவு
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
- முதலில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ஊற வைத்த கடலைப்பருப்பு, உளுந்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வெங்காயம், புதினா சேர்த்து நன்கு கலந்து வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பின் துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
- இவை எல்லாம் நன்கு வதங்கியதும் இதனுடன் காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை சேர்த்து குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரம் மசாலாத்தூள், புதினா இலையும் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூடான, சுவையான சென்னை வடகறி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தால் சென்று சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும்