நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல், முடிந்தவரை பெற்றோர்கள் அவற்றை குறைத்துக் கொண்டே வரவேண்டும். எனவே வீட்டில் அவர்களுக்கு சுவையான உணவுகளை செய்து கொடுத்துப் பழகுங்கள். அவ்வாறு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியமாகவும், சுவை மிகுந்ததாகவும் செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த குழிப்பணியாரம். இதனை மக்காச்சோளம் சேர்த்து இப்படி ஆரோக்கியமான உணவாக செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
மக்காச்சோளத்தின் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரிசெய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது. மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன.
முன்பெல்லாம் இந்த மக்காச்சோளம் வேக வைத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதை எல்லாம் செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த மக்காச்சோளம் பயன்படுத்தி இது போல ரெசிபிகளாக நாம் செய்து கொடுத்தால் வளரும். குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவை நாம் கொடுத்தது போல இருக்கும். வாங்க அந்த மக்காச்சோளம்வைத்து செய்யப்படும் பணியாரத்தை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மக்காச் சோள பணியாரம் | Corn Paniyaaram Recipe In Tamil
Equipment
- 1 குழிபணியார கல்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ மக்காச்சோளம்
- 1 கப் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
அரைக்க
- 1 தக்காளி
- 2 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் வெங்காயம்
செய்முறை
- மக்காச்சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- வழக்கமாக அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. மக்காச்சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
- அரைத்தஉளுந்து மாவுடன் மக்காச்சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும். மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, மக்காச்சோள பணியார மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற வேண்டும்.
- ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்க வேண்டும். சுவையான மசாலா சேர்த்த மக்காச் சோள பணியாரம் தயார்.