நம்ம பெரும்பாலும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, காரச் சட்னி, பூண்டு சட்னி வெங்காய சட்னி அப்படின்னு தான் சாப்பிட்டு இருப்போம். ஆனா அதெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு ஒரு சிலருக்கு ரொம்பவே போர் அடிச்சி இருக்கும். டிஃபரண்டா ஏதாவது சட்னி செஞ்சு தர சொல்லி வீட்லயும் கேட்டுட்டே இருப்பாங்க. அப்படி கேட்கிறவர்களுக்கு இந்த கோவக்காய் சட்னி செஞ்சு குடுங்க. இந்த கோவக்காயில நிறைய நன்மைகள் இருக்கு. கோவக்காயில நம்ம பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.
குழம்பு கூட வச்சு சாப்பிட்டு இருப்போம். அது எல்லாமே ரொம்பவே அருமையா இருக்கும் ருசியாகவும் இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் புதுசா கோவக்காய் சட்னி செய்ய போறோம். இந்த கோவக்காய் சாப்பிட்டால் நம் உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. செரிமான பிரச்சினைகள் இருக்க உங்களுக்கு இந்த கோவக்காய் சட்னி கொடுத்தீங்கன்னா சரியாகிவிடும்.
அதுமட்டுமில்லாமல் உடம்புல இரத்த சர்க்கரையோட அளவு சீரா இருக்கும். சில குழந்தைகள் கோவக்காய் அப்படியே கொடுத்தா சாப்பிட மாட்டாங்க. அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கோவக்காயில் சட்னி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு இட்லி இரண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட இந்த கோவக்காய் சட்னி கொடுத்தா இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க.
இட்லி தோசைக்கு மட்டுமில்லாமல் சப்பாத்திக்கும் வெறும் சாதத்துக்கு பிசைந்து சாப்பிடவும் கூட இந்த கோவக்காய் சட்னி ரொம்பவே அருமையா இருக்கும். ரொம்ப எளிமையா செய்யக்கூடிய இந்த கோவக்காய் சட்னி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
கோவக்காய் சட்னி | Ivy Gourd Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கோவக்காய்
- 7 சின்ன வெங்காயம்
- 5 பூண்டு பற்கள்
- 3 பச்சை மிளகாய்
- 4 காய்ந்த மிளகாய்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- புளி எலுமிச்சை பழ அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- கருவேப்பிலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கோவக்காய் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு சின்ன வெங்காயம் பூண்டு புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதனை நன்றாக வதக்கிய பிறகு எடுத்து தனியாக வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- அதன் பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் வெந்தயம் மல்லி அனைத்தையும் சேர்த்த நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது அனைத்தும் ஆறிய பின்பு வதக்கி வைத்துள்ளதையும் வறுத்து வைத்துள்ளதையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்தவுடன் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்
- இப்பொழுது சுட சுட ருசியான கோவக்காய் சட்னி தயார்.