நார்ச்சத்து நிறைந்த இந்த மொச்சை காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொச்சை பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த மசாலா சேர்த்து போட்டு மொச்சை பொரியல் செய்து கொடுத்தால், மொச்சை கண்டால் வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும்.
என்னதான் சிட்டியில் வாழும் மக்கள் விதவிதமான உணவுகளை உண்டாலும் முழுமையான உணவு என்பது சாப்பிட்ட பிறகு வயிறும், மனமும் முழு திருப்தி அடைவதே ஆகும். அவ்வாறான சுவைமிக்க உணவுகளை கிராமப்புறங்களில் மட்டுமே உண்ண முடியும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எங்கள் அத்தை சமைத்தது எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் கிராமத்து சுவையில் செய்யக்கூடிய மொச்சை பொரியலை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மொச்சை பொரியல் | Mochai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் மொச்சை
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 பற்கள் பூண்டு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
- 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
- உப்பு தேவையானஅளவு
தாளிப்பதற்கு
- 1 டீஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை சிறிது
- 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.
- அடுத்து,அதில் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து மசாலாவானது மொச்சையில் ஒன்று சேர நன்கு பிரட்டி இறக்கினால், மொச்சை பொரியல் ரெடி!!!