கீரை உடலுக்கு உரிய அனைத்து சத்துக்களையும் அடக்கிய ஒரு உணவு பொருளாகும். கீரைகளை அடிக்கடி நாம் உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. கீரையில் இருக்கும் கால்சியம், விட்டமின்ஸ், நார்ச்சத்து, இரும்பு சத்து உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கின்றன.
கீரையை வாரம் இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை தீரும். செரிமான கோளாறுகள் தீர்ந்துவிடும் . கீரை உண்டால் கீழ் வயிறு சுத்தமாகும் என்பதற்கு ஏற்ப கீரைகளை உண்ணும் பொழுது குடல் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகிறது. கீரைகளை சூப்பாகவோ, பொரியலாகவோ, குழம்பாகவோ, கூட்டாகவோ, கடையலாகவோ செய்து சாப்பிடலாம். சில கீரைகளை பச்சையாகவே உண்ணலாம்.
கீரைகளை மூலிகை என்று கூறவேண்டும். நாம் இப்போது ஒரு சில கீரைகள் மட்டுமே நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்தக் கீரைகள் வெறும் உணவு பொருள்கள் மட்டுமல்ல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளும் ஆகும். ஆகவே முடிந்த அளவு கீரைகளை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நம் இல்லத்தாருக்கும் மிகவும் நன்மை பயக்கும் .
குழந்தைகளுக்கு கீரைகளை உண்ண வைப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகும். ஆகையால் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு கீரைகளை பழக்கப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கீரையில் இருக்கும் நன்மைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். இன்று நாம் முளைக்கீரையை பயன்படுத்தி எப்படி கிராமப்புறங்களில் பொரியல் செய்வார்களோ அதே போல் பொரியல் செய்து சாப்பிட இருக்கிறோம். கிராமத்து ஸ்டைலில் எப்படி அந்த பொரியலை செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்
முளைகீரை பொரியல் | Molaikeerai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு முளைக்கீரை
- 1 வெங்காயம்
- 1 கப் தேங்காய் துருவல்
- 6 பல் பூண்டு
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 2 காய்ந்தமிளகாய்
செய்முறை
- முதலில் முளைக் கீரையை வாங்கி தூசிகள் இல்லாமல் எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நறுக்கிய முளைக்கீரைகளை நீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு வேலை முளைக்கீரைகள் மண் கலந்திருந்தால் அந்த மண்ணெல்லாம் நீரில் படிய ஆரம்பிக்கும்.
- அதன் பிறகு கீரைகளை அலசி எடுத்து மீண்டும் இதே போல் ஒரு இரண்டு மூன்று முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான கீரையாக இருந்தால் இரண்டு முறை அலசினால் போதும். ஏதாவது மண் இருப்பது போல் இருந்தால் நீங்கள் மூன்று நான்கு முறை அலச வேண்டும். அலசிய கீரைகளை எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.
- அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள முளைக்கீரை, பூண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
- மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் கழித்த பிறகு திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். மீண்டும் மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- கீரை என்பதால் இவை சீக்கிரம் வெந்துவிடும் ஆகையால் நன்றாக கிளறி தண்ணீர் சுண்டிய பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் கிராமத்து ஸ்டைலில் முளைக்கீரை பொரியல் தயார்.
- இந்த முளைக்கீரை பொரியலை காரக்குழம்பு ,வத்தல் குழம்பு இவற்றுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.