சோயா மஞ்சூரியன் என்றால் என்னன்னு தெரியாதவர்களும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். மீள் மேக்கரில் செய்றது தான் சோயா மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சோயா மஞ்சூரியன். இதை சோயா கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று செய்திடலாம்.
சோயா கொண்டு செய்யப்படும் இந்த சோயா மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மஞ்சூரியன் என்றாலே நமக்கு காலிபிளவர் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த சோயா மஞ்சுரியன் செய்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதிகம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்தமான இந்த சோயா மஞ்சூரியன் இப்படியும் செய்து கொடுத்துப் பாருங்கள். சுவையான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
சோயா மஞ்சூரியன் | Soya Manchurian Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் சோயா (மீல் மேக்கர்) உருண்டைகள்
- 1 தேக்கரண்டி கடலை மாவு
- 1 தேக்கரண்டி மைதா
- 1 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி அஜினோமோட்டோ
- 1 குடை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- வெங்காயத்தாள் சிறிதளவு
செய்முறை
- வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்,ஒரு பாத்திரத்தில் பாதி அளவு நீரை ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் சோயாவைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- பிறகு அதை குளிர்ந்த நீரில் 2 முறை அலசிவிட்டு தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், உப்பு, கலர் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை வேகவைத்து எடுத்த சோயா மீது தூவி சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் சோயாவை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- இதேபோல் மீதமுள்ள சோயாவையும் பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், அனைத்தும் நன்கு சுருள வதங்கியதும் பொரித்த சோயா உருண்டைகளை சேர்த்து கிளறிவிடவும்.
- பிறகு கார்ன் ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, சோயா கலவை மீது ஊற்றி கிளறிவிட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும். சுவையான சோயா மஞ்சூரியன் தயார்.