தற்கால அம்மாக்கள் பலரும், சிறுவயதில் தமது கிராமத்தில், பாட்டி அல்லது அம்மா செய்த சமையலை சப்புக்குட்டி சாப்பிட்டோமே என்று மனதில் பல உணவுகளை நினைத்துப் பார்ப்போம், இருப்பினும் அந்த உணவு செய்முறை தெரியாததால் நமது குழந்தைகளுக்கு செய்ய முடியவில்லையே என்று நினைத்திருப்போம். அப்படிப்பட்ட மண் மணம் மாற உணவு தான் இந்த மணத்தக்காளி தண்ணீர் சாறு.
இந்த சாறு பார்ப்பதற்கு என்னமோ பச்சை தண்ணீர் போல் தான் இருக்கும் ஆனால் அதன் ருசியோ இளநீர் போல் அவ்வளவு ருசியாக இருக்கும். அதன் மனம் சொல்லவே வேண்டாம். மணத்தக்காளி கீரைக்கு என்றே தனி மருத்துவ குணம் உண்டு. சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம், சளியை நீக்குவதோடு, வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி தண்ணீர் சாறு அரிசி கலையும் தண்ணீரில் செய்வார்கள் இதில் அதிக மசாலாக்கள் எதையும் சேர்க்காமல் செய்யப்படும் இந்த சாறை சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை சரியாகும் . வாங்க இந்த பாரம்பரிய மணத்தக்காளி தண்ணீர் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மணத்தக்காளி தண்ணீர் சாறு | Manathakkali Soup
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு மணத்தக்காளி கீரை
- 1 கப் அரிசி களைந்த தண்ணீர்
- 1 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1/2 தேக்கரண்டி மிளகு
- 1/2 கப் தேங்காய் பால்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு
- 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 மேசைக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- பொட்டுகடலை,மிளகு சேர்த்து போட்டு பொடி செய்து கொள்ளவும், கீரையை ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து வைத்திருக்கும் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்.
- அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை போட்டு உப்பு சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் தேங்காய் பால், ஊற்றி பொட்டுக்கடலை, மிளகு பொடியை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான மணத்ததக்காளி தண்ணீர் சாறு ரெடி.