மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது கத்தரிக்காய் சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு.
கத்தரிக்காயில் புளிக்குழம்பு வைப்பது போல் கத்தரிக்காய் மோர் குழம்பும் வைக்கலாம். காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும். இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.
மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மோர் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்தரிக்காய் மோர் குழம்பு | brinjal mor kulambu recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் தயிர்
- 5 கத்தரிக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் சாம்பார் பொடி
- தேவையான அளவு உப்பு
அரைக்க
- 1/2 டீஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 துண்டு இஞ்சி
- 5 பச்சை மிளகாய்
தாளிக்க
- 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 2 வர மிளகாய்
- 1/2 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை
- முதலில் ஒரு கப் தயிர் எடுத்து அதனை நன்கு கடைந்து கொள்ளவும்.
- மல்லி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, வரமிளகாய், சீரகம் இவற்றை அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸியில் இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய், மஞ்சள் தூள் மற்றும் நாம் ஊற வைத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
- நாம் அரைத்த விழுதை கடைந்த தயிரில் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தயிரை சேர்த்து மிதமான தீயில் நுரை பொங்க கொதிக்கவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி அதனுடன் சிறிதளவு தண்ணீர், சாம்பார் தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த கத்தரிக்காயை மோர் குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அதன்பிறகு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோருடன் சேர்த்து கலந்து விடவும்.
- ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் மோர் குழம்பு தயார்.