பாகற்காய் என்ற பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அலறி அடித்து ஓடுவார்கள். நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கடைகளில் வாங்கும் ஊறுகாயில் பிரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கடைகளில் விற்கும் பாட்டில் ஊறுகாயில் சுவை அதிகரிப்பதற்காக சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். அது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், நிறைய பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
இனி வரப்போகிற வெயில் காலத்தில் கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள பாகற்காய் ஊறுகாய் சூப்பரான காமினேஷன். பாகற்காய் உடலில் இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பாகற்காயின் கசப்பு தெரியாமல் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சாப்பிடலாம். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாகற்காயை வைத்து வீட்டிலேயே சுவையான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகற்காய் ஊறுகாய் | Bitter Gourd Pickle Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 2 பெரிய பாகற்காய்
- 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கப் புளி
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பில்லை
- 2 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் வெல்லம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 10 பல் பூண்டு
அரைக்க :
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் கடுகு
செய்முறை
- முதலில் பாகற்காயை நன்கு கழுவி விட்டு நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம், கடுகு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுளில் புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பாகற்காயில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து வரும் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து புளி விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
- அதன்பிறகு வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்கு கலந்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- அதன்பிறகு இறுதியாக வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஊறுகாயில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- தயாரான ஊறுகாயை எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் சேர்த்து வைத்து கொள்ளவும். இந்த ஊறுகாய் சூடான சாதம், தயிர் சாதம், கலந்த சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாகற்காய் சம்பல் சாதத்திற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும்!!!