பாகற்காய் என்றாலே பலரும் பயந்து ஓடி விடுவார்கள். ஏனெனில் அதன் கசப்புத்தன்மை பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அரிதானவர்களே. கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
உடம்பில் ரத்தத்தில் இருக்கும் நச்சுதன்மை அழிக்கவும் பாகற்காய் பெரிதும் துணை புரிகிறது. இந்த பாகற்காயை பொட்டுக்கடலை சேர்த்து அனைவரும் சாப்பிடும் வகையில் எப்படி கசப்பு தன்மை இல்லாமல் சுவையாக செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரெண்டு பாகற்காய் இருந்தால் போதும், பொட்டுக்கடலை சேர்த்து இது போல நீங்கள் சட்டுனு 10 நிமிடத்திலேயே பொரியல் வச்சு பாருங்க, யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!நீங்க இனி பாகற்காயை தேடி தேடி வாங்குவீங்க! அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.
பாகற்காய் பொட்டுக்கடலை பொரியல் | Bitter guard Fried Gram Fry
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கிராம் பாகற்காய்
- 50 கிராம் பொட்டுக்கடலை
- 5 பச்சை மிளகாய்
- 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி மிளகு
- 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
செய்முறை
- பாகற்காயை இரண்டாக வகுந்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு 8 நிமிடம் வேக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, பெருங்காயத் தூள் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு மிக்ஸியில் பொட்டுக்கடலையை போட்டு பொடி செய்து கொள்ளவும், அதனுடன் வறுத்த மிளகை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளித்து, அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் வேக வைத்த பாகற்காயை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு பச்சை மிளகாயுடன் போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி விடவும். பிறகு பாகற்காயுடன் பொடித்த பொட்டுக்கடலை மிளகு பொடியை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- அதில் கால் கப் தண்ணீரை தெளித்து விட்டு நன்கு கிளறிய பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் கழித்து நன்றாக ஒரு முறை கிளறி இறக்கி விடவும்.
- வழக்கமாக செய்யும் பாகற்காய் பொரியல் போல் இல்லாமல் இது சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். அதிக கசப்பும் இருக்காது.