நாம் என்ன தான் ஹோடேல்களிலோ அல்லது ரெஸ்டாரண்டிலோ வாங்கி சாப்பிட்டாலும், இந்த கிராமத்து பாரம்பரிய சுவையை தான் நமது மனம் தேடும். பிட்சா தராத முழுமையை மண்சட்டி மீன் குழம்பு தந்து விடும். அவ்வகையில் இன்று நாம் ஒரு புளிக்குழம்பு செய்முறையை தான் பார்க்கப்போகிறோம்.
நகரத்தில் இதை காரக்குழம்பு என்று கூறுவார்கள். காரக்குழம்பு கத்திரிக்காயில், மொச்சை போன்றவற்றில் செய்து இருக்கிறோம். ஆனால் அவரைக்காயை சேர்த்து புளிக்குழம்பு செய்வதும், அதன் சுவையும் பலருக்கு தெரியாது. அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. அவரைக்காயில் வாரம் ஒரு முறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காய் புளிக்குழம்பு இதே முறையில் உங்கள் வீட்டில் செய்ய , வாருங்கள் இந்த பதிவிற்குள் செல்லலாம்.
அவரைக்காய் புளிக்குழம்பு | Broad Beans Gravy In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- கால் கிலோ அவரைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து மல்லித்தழை
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
- 1/4 கப் புளிச்சாறு
- 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய தேவைக்கேற்ப
செய்முறை
- அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிது ஊற்றி அவரை, தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித்தழை போட்டு கலந்து 30 நிமிடம் வேக விடவும்.
- பின்பு புளிக்கரைசலை ஊற்றி , சிறிது தண்ணீர் குழம்பு பதத்திற்கு தேவையான அளவு சேர்த்து , 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை அவரை குழம்பில் ஊற்றவும்.
- சுவையான அவரைக்காய் புளிக்குழம்பு தயார், இதில் இறால், கருவாடு சேர்த்தால் கூடுதல் ருசி கிடைக்கும். சூடான சாதத்திற்கு மிக ஏற்ற உணவு.