கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் ரசம், சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும். நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இரும்மல், தொண்டை வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது. தலை வலி, தலை பாரம், சளி, இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் நண்டு சூப் செய்து சாப்பிட்டால் போதும். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த நண்டு சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். கிராமங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த நண்டு சூப் வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செட்டிநாடு நண்டு சூப் | Chettinad crab soup recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 6 பல் பூண்டு
- 1 தக்காளி
- 4 பச்சை மிளகாய்
- 4 நண்டு கால்கள்
- 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
செய்முறை
- முதலில் நண்டு காலை கழுவி சுத்தம் செய்து கல்லை வைத்து நண்டின் ஓட்டை லேசாக தட்டிக் கொள்ளவும்.
- ஒரு கல்லில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி இவற்றை வைத்து இடித்துக் கொள்ளவும்.
- ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இதில் நாம் இடித்து வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து இதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.
- இவை வதங்கிய பின் இடித்து வைத்துள்ள நண்டு கால்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு சிறு தீயில் அரை மணிநேரம் வேகவிடவும்.
- அதன்பிறகு மிளகு, சீரகம், சோம்பு இவற்றை கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
- சிறிது நேரம் கழித்து நண்டின் நிறம் மாறி வந்ததும் இதில் இடித்து வைத்துள்ள மிளகு பொடி, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான நண்டு சூப் தயார்.