பொதுவாக சிக்கன் குழம்பை எப்படி செய்தாலும் சிக்கனின் சுவை குழம்பில் சேர்ந்து அந்த குழம்பினை மிகவும் சுவையாகிவிடும் அல்லவா? நாம் சாதாரணமாக செய்யும் கோழி குழம்பே அவ்வளவு ருசியாக இருக்கும் போது. நாம் முறையாக, பக்குவமாக கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்தால் அந்த சிக்கன் குழம்பு எப்படி இருக்கும் பாருங்களே.
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கிராமத்து ஸ்டைலும் ஒன்று. இந்த கிராமத்து கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான கோழி குழம்பை செய்ய நினைத்தால், கிராமத்து நாட்டுக் கோழி குழம்பை செய்யுங்கள்.
நாட்டுக்கோழி குழம்பு| Country Chicken Kulambu In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கி நாட்டுக் கோழி
- 1/4 கி சின்ன வெங்காயம்
- டீஸ்பூன் மஞ்சள் தூள்
- டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 தக்காளி
- 100 கிராம் இஞ்சி
- 150 கிராம் பூண்டு
அரைக்க
- 2 ஸ்பூன் மல்லி
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கசகசா
- 6 வத்தல் காரத்திற்கேற்ப
தாளிக்க
- 2 பட்டை
- 1 அன்னாசிப்பூ
- 2 கிராம்பு
- 1 கல்பாசி
- 2 ஏலக்காய்
- கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் சிக்கனை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு தட்டி போட்டு சிக்கன் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
- பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, பட்டை, அன்னாசிபூ, கிராம்பு, கல்பாசி மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதற்கிடையில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த மசாலா ஆறியதும் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி பூண்டு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து சிக்கனைச் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.சிக்கன் கால் பங்கு வெந்ததும் நாம் மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சிக்கன் குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- சுவையான வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு ரெடி.