காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பட்டாணி கறி செய்து பாருங்கள். சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள்.
காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் காளான் சூப், காளான் மசாலா, காளான் குழம்பு என்று பலவாறு காளானை சமைத்து சாப்பிடலாம். இப்போது காளானில் சுவையான பட்டாணி கறி வைப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் பட்டாணி கறி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் பட்டாணி கறி.
மஷ்ரூம் பட்டாணி கறி | Mushroom Peas Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 200 கி காளான்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 1 உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கப் தக்காளி விழுது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
செய்முறை
- முதலில் காளானை நன்கு கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணி, காளான் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
- பின் கறி நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான காளான் பட்டாணி கறி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!