ரசம் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்திய உணவு வகை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் தினசரி செய்யக்கூடிய உணவு. சாதம் ரசம் சாம்பார், பொறியல் என அனைத்தும் வித விதமாக இருந்தால் தான் நம்மால் சுவையாக சாப்பிட முடியும் அல்லவா..?
அதிலும் குறிப்பாக ரசம் இல்லாமல் உணவை எடுத்துக்கொண்டால், செரிமானம் சரி இல்லாமல் அவதிக்குள்ளாக நேரிடும். ரசத்தில் உள்ள மசாலாக்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ரசத்தில் புதினா ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், நண்டு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இது நாள் வரை புளி ரசம் மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வந்த நம்மவர்களுக்கு இனி அன்னாசி பழ ரசம் ரெடி.
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான ரசத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
அன்னாசி பழ ரசம் | Pineapple Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் நறுக்கிய அன்னாசி பழம்
- 2 கப் தண்ணீர்
- 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
- 1/4 ஸ்பூன் பெருங்காயம்
அரைக்க
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 7 பல் பூண்டு
- 4 காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையானஅளவு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நறுக்கி வைத்த அன்னாசி பழம் சேர்த்து குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
- பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, அன்னாசிப்பழ சாறு சேர்த்து அதனுடன் புளிக் கரைசலை சேர்த்து, பின்னர் அதில் அரைத்த இஞ்சி பூண்டு சீரகம் விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அதனுடன் சிறிது கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- அதில் நாம் கரைத்து வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான அன்னாசி பழ ரசம் தயார்.