சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். சப்பாத்திக்கு குருமா காம்பினேஷன் எனில் அதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது. குருமா தானே அதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். அதுதான் இந்த ரெசிபியின் தனித்துவம்.
இந்த குருமாவில் தேங்காய் சேர்த்து அருமையான பக்குவத்தில் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. உருளைக்கிழங்கு சத்தானது, மாவுச்சத்து நிறைந்தது. பச்சைப்பட்டாணியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டும் சேர்த்து செய்யப்பட்ட சமையல் உடல் நலத்திற்கு ஏற்றது.
இது ஆலு மட்டர் குருமா என்று வடநாட்டிலும், தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா என்றும் அழைக்கப்படுகிறது. எளிதில் செய்யக்கூடிய சைவ சமையல் இது. உருளைக்கிழங்கையும், பச்சை பட்டாணியையும் வைத்து ஒரு சூப்பர் குருமா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த இரண்டு பொருட்களை சேர்த்து வைக்கும் இந்த சைடிஷ், உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், நாவிற்கு நல்ல சுவையும் கொடுக்கும். மிக மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். இவை செய்வதற்கு தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும் இவை செய்வதற்கு சுலபம் தான்.
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா | potato peas kuruma recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் உருளைக்கிழங்கு
- 1 பிரிஞ்சி இலை
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தயிர்
- 1/4 கப் பச்சைப் பட்டாணி
- 1/4 கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்
- உப்பு தேவையான அளவு
- புதினா சிறிதளவு
அரைக்க :
- 1/2 கப் தேங்காய்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- கடல் பாசி சிறிதளவு
- 10 முந்திரி
செய்முறை
- முதலில் அனைத்து காய்கறிகளையும் நன்கு கழுவி நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பிரிஞ்சி இலை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி பூண்டு வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- சிறிது நேரம் கழித்து தயிர் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி, முந்திரி மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிது புதினா இலைகளை தூவி பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். இது சப்பாத்தி பரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.