மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.புடலங்காய் கூட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு பொரியல் வகை. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
புடலங்காய் கூட்டிற்க்கு என ஒரு கூட்டம் கல்யாண விருந்துகளில் பங்கேற்பார்கள் என்றால் அது மிகை அல்ல. கூட்டுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் காலிஃபிளவர் கூட்டு, சுரக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணிக்காய் கூட்டு, வெள்ளரிக்காய் கூட்டு, மற்றும் வாழைத்தண்டு கூட்டு மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது புடலங்காய் கூட்டு. இந்த புடலங்காய் கூட்டானது கார குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற அனைத்து குழம்பிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.
உடல் எடை கூடியவர்களின் உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது இந்த புடலங்காய் கூட்டு. புடலங்காய் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம்.
கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு | pudalangai koottu recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 புடலங்காய்
- 3 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 3 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பல் பூண்டு
- 1 காய்ந்த மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
அரைக்க
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பச்சை மிளகாய்
தாளிக்க
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 காய்ந்த மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் புடலங்காயை தோல் சீவி, நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை நன்கு கழுவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் தண்ணீரை வடிகட்டி குக்கரில் சேர்த்து அதனுடன் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு இறக்கவும்.
- அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இரண்டு நிமிடங்கள் கழித்து இதில் புடலங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு இதில் வேக வைத்த பருப்பை நன்கு மசித்து சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர் நாம் அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து புடலங்காயுடன் ஊற்றி கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு தயார்.