சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. அதற்கடுத்த அனைவராலும் விரும்பப்படுவது தயிர் பூரி தான். நம்மூரில் தான் பானி பூரி, தயிர் பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே, புல்கிஸ், ஃபுச்கா இவை அனைத்தும் பூரிக்கான மற்றொரு பெயர்கள். உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள பிட்சா, பர்கர், மோமோஸ் வரிசையில் தயிர் பூரியும் ஒன்று என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் தயிர் பூரி தனது சுவையால் நாக்கை ஆக்கிரமித்து வருகிறது.
உண்மையில் தயிர் பூரி எப்படி தோன்றியது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் மகாபாரத்தில் திரெளபதியால் பூரி அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இந்தியாவில் பல ஆண்டுகளாக பரவி வருகிறது. கங்கை கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றி அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பரவி தற்போது தமிழகத்திலும் இளம் தலைமுறை விரும்பும் சாட் உணவாக மாறியுள்ளது தயிர் பூரி.
தயிர் பூரி பெரும்பாலானோருக்கு விருப்பமான சாட் ஐட்டங்களில் ஒன்றாகும். சுவையான பூரியுடன் காரமான மசாலா மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடும் போது அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். என்னதான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் நம் வீட்டில் நாம் தயாரித்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இதனை குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம். இந்த சுவையான தயிர் பூரி ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர் பூரி | tayir puri recipe in tamil
Equipment
- 1 குக்கர்
- 2 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 பெரிய வெங்காயம்
- 1/2 கப் தயிர்
- 4 டேபிள் ஸ்பூன் ஓமப்பொடி
- 1 உருளைக்கிழங்கு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 கேரட்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
பூரி செய்ய
- 200 கி மைதா மாவு
- 100 கி ரவை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பூரி செய்வதற்கு மைதா மாவு, ரவை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின்னர் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சிறு சிறு பூரி போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு மற்றொரு பவுளில் தயிருடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது அதை தோல் நீக்கி அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலா, பெரிய வெங்காயம் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் நாம் தயார் செய்து வைத்துள்ள பூரியின் நடுவில் சிறிது ஓட்டை போட்டு அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மேலே தயிர் ஊற்றி பிறகு அதன் மேல் கேரட் கலவையை தூவி மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தயிர் பூரி தயார்.