சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இந்த மாதிரி, அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய புலாவ் போன்ற உணவு வகைகளில், பாலக் மற்றும் தினை சேர்த்து செய்தால், சத்தும், சுவையும் ஒரு சேரக் கிடைத்து விடும். பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால், பால் அதிகம் சுரக்க உதவுகிறது. கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் நம் உடலை பாதுகாக்கலாம். பாலக் கீரை மிகவும் சத்தானதாகவும், இரும்புச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால், இந்த ஆரோக்கிய சைவ பிரியாணியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
ரைதா அல்லது தயிருடன் இந்த உணவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த புலாவ் தினை அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குதிரைவாலி, வரகு, சாமை போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல புலாவ் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த தினை பாலக் புலாவ் சாதத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினை பாலக் புலாவ் | Thinai Palak Pulao Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் தினை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 5 முந்திரி
- 3 பச்சை மிளகாய்
- 1 கப் பாலக் கீரை
- புதினா, கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 அன்னாசி பூ
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 கப் பச்சை பட்டாணி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் தினை அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் பால்க் கீரை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, அன்னாசி பூ, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் அரைத்து வைத்துள்ள பாலக் விழுது, பச்சை பட்டாணி மற்றும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் புதினா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை பாலக் புலாவ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!