குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடையை விரும்பி சாப்பிடுவார்கள். வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமானவை. பொதுவாக பலரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடைகளை வழக்கமாக சுவைப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முருங்கைக்கீரை வடை. முருங்கை கீரை கை, கால் உடம்பு வலிக்கு சிறந்த நிவாரணி. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. முருங்கைக்கீரை வடையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையில் உடம்புக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருக்கின்றது. மேலும் இதை மற்ற வடைகளை போன்றே எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக நாம் செய்து விடலாம்.
பொதுவாக குழந்தைகளுக்கு முருங்கை கீரையை பொரியல் செய்து கொடுத்தால் அதை அவர்கள் உண்ண அடம் பிடிப்பார்கள். ஆனால் இவ்வாறு முருங்கைக்கீரை வடையை செய்து கொடுத்தால் அவர்களை கேட்கக்கூட வேண்டாம் அவர்களாக தன்னால் இதை விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான சத்தான மாற்றும் கூட. மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முருங்கைக்கீரை மசால் வடை | Murungaikeerai masal vadai recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 3 கப் கடலை பருப்பு
- 5 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி
- எண்ணெய் தேவையான அளவு
- 3 கப் முருங்கை கீரை
செய்முறை
- முதலில் கடலைப்பருப்பை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், உப்பு, சோம்பு, பெருங்காயம், ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, மல்லிதழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அதன்பிறகு முருங்கை கீரை, உப்பு மற்றும் சோம்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். விருப்பப்பட்டால் முருங்கை கீரையை மிக்ஸியில் அரைத்தும் சேர்த்து கொள்ளலாம்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நாம் கலந்து வைத்த மாவை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சத்தான சுவையான முருங்கைக்கீரை மசால் வடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மழைக்கு இதமா சுட சுட மட்டன் வடை மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி ட்ரை பண்ணி பாருங்க!