பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது நவதானிய பக்கோடா. ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் நவதானிய பக்கோடா தான் இன்றைய ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.
மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் bajji என்றும், மகாராஷ்டிராவில் Pakoras என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் வெங்காயம், துவரம் பருப்பு, கொள்ளு மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். அதனால் இந்த மொறு மொறுப்பான நவதானிய பக்கோடாவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து மாலை நேரத்தில் ஒரு கப் காபியுடன் சுவையுங்கள். இதை வீட்டிலேயே எந்த அஜினமோட்டோ கலப்படமும் இன்றி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதோடு நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம்.
நவதானிய பக்கோடா | Navathaniya Pakoda Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் பச்சரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கொண்டைக்கடலை
- 1 டேபிள் ஸ்பூன் கொள்ளு
- 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் பச்சை பட்டாணி
- 1 பெரிய வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 5 வர மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பில்லை
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் உளுந்து, கொள்ளு, கொண்டைக்கடலை, கடலை பருப்பு, பச்சை பட்டாணி, துவரம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
- பின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஊற வைத்த அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை தேவையான அளவு எடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு, உப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் அருமையான சுவையுடன் கூடிய மொறு மொறு நவதானிய பக்கோடா தயார். இந்த பக்கோடா மாலை வேளையில் டீயுடன் சேர்த்து சுவைக்க அருமையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆலு பாலக் பக்கோடா இனி இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!