நெஞ்செரிச்சலில் இருந்து விடுவிக்கும் ஆரஞ்சுத் தோல் டீ!

நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர் அது இதயநோயாக இருக்கும் என்று நினைத்த

By Maria Bellsin · 3/12/2022

நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர் அது இதயநோயாக இருக்கும் என்று நினைத்து பயப்படுவார்கள். சிலர் அதற்கென சுயமாக மருத்துவம் செய்துகொள்வார்கள். இது இதய நோய் இல்லை என்றாலும் இந்தப் பிரச்சினை பல பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொண்டு அதை சரிசெய்வதற்கு தேவையான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.


ஓமம், சீரகம், பெருஞ்சீரகம்


நெஞ்செரிச்சல் பிரச்சினையை சரிசெய்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் பலர் ஓமத்தை வறுத்துச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் ஓமவாட்டர் குடிப்பதுண்டு. ஓமம், சீரகம், பெருஞ்சீரகம் என மூன்றையும் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தாலும் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம். ஆக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். இவைதவிர மூலிகைத் தேநீர் தயாரித்துக் குடிப்பதன்மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.


ஆரஞ்சுப்பழத்தோல் தேநீர்


மூலிகை என்று சொன்னதும் குடிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். ஆரஞ்சுப்பழத்தின் தோலில் தயாரிக்கப்படும் தேநீர் பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பொதுவாக ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டதும் அதன் தோலினை தூக்கி எறிந்துவிடுவோம். இனிமேல் ஆரஞ்சுப்பழத்தின் தோலை தூக்கி எறியாமல் காயவைத்து அதில் தேநீர் தயாரித்துக் குடியுங்கள். காய வைக்காமல் அப்படியேகூட பயன்படுத்தலாம். இதன்மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அரை ஆரஞ்சுப்பழத்தின் தோலை எடுத்து அதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் அதை வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நெஞ்செரிச்சல் சரியாகும்.


உடல் எடை குறைக்கலாம்


டீ, காபி குடிப்பதால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ இந்த ஆரஞ்சுப்பழத்தின் தோலில் டீ தயாரித்துக் குடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பானத்தை தயார் செய்து குடித்துவந்தால் பலன் கிடைக்கும். நெஞ்செரிச்சல் மட்டுமல்ல உடல் எடை அதிகமாக உள்ளவர்களும்கூட இந்த மூலிகைத் தேநீரை தயாரித்துக் குடிக்கலாம்.


உணவுப்பழக்கம்


ஆரஞ்சுப்பழத்தோலில் தயார் செய்த தேநீரை குடித்தால் இப்போதைக்கு பிரச்சினை சரியாகலாம். இனிமேல் வராமலிருக்க வேண்டுமென்றால் உணவுப்பழக்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சரியான நேரத்துக்கு சரியான உணவை சாப்பிட வேண்டும். பிரைடு ரைஸ், சிக்கன் 65, காளான் ப்ரை போன்ற மசாலாக்கள் அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. மேலும் பொதுவாக நாம் உண்ட உணவு செரிமானமாகிறதா என்று பார்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் செயல்பாடு ஒழுங்காக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். இதன்படி செயல்பட்டால் எந்தப்பிரச்சினையும் வராது. முக்கியமா நெஞ்செரிச்சல் பிரச்சினை வராது.

எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

Recipes AMP · Quick view
View full