குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான். சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம், தயிர் ஓட்ஸ் கிச்சடி, தயிர் சாதம், தயிர் கிச்சடி, கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு சாதம்.
பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டினுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும் கிடைக்கும். அரசி மூலம் கார்போஹைட்ரேட் கிடைக்கும் என்பதால் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஆற்றல் நிறைந்த உணவாக பாலக் கீரை பருப்பு சாதம் அமையும். பொதுவாக குழந்தைகள் உணவில் கீரையை சேர்க்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் கீரையை சேர்க்க நினைத்தால் இந்த பாலக் கீரை பருப்பு சாதம் ஒரு நல்ல சாய்ஸ்.
சுவையான ஆரோக்கியமான உணவாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்த கீரையை கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில்,போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. இன்று பாலக்கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பாலக் கீரை பருப்பு சாதம் | palak dal rice recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு பாலக் கீரை
- 1 டீஸ்பூன் சீரகம்
- 15 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
- 10 பல் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டம்ளர் அரிசி
- 1/4 கப் துவரம் பருப்பு
செய்முறை
- முதலில் பாலக் கீரையை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் பாலக் கீரை சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- பின்னர் அதில் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் வரை விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை பருப்பு சாதம் தயார்.