இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஈஸியான முறையில் பன்னீர் கேப்ஸிகம் மசாலா செய்து கொடுங்கள்.
இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது.
இந்த பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பன்னீர் கேப்ஸிகம் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.
பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் பன்னீர் கேப்ஸிகம் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம். சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா எப்படி தாயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பன்னீர் கேப்ஸிகம் மசாலா | Paneer Capsicum Masala Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 பாக்கெட் பன்னீர்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 குடைமிளகாய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம்
- 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
- பின் வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தனித்தனியாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் பட்டர் சேர்த்து உருகியதும் சீரகம், பட்டை, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- இது சிறிது கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார். இது சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான பன்னீர் மக்னி இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!