கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள், காய்கறிகள், மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் வித விதமாக சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் கிரேவி, மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி.
குடைமிளகாய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குட மிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய வைட்டமின் சி குடைமிளகாயில் ஏராளமாக இருப்பதால், அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பலருக்கு குடைமிளகாயை வாங்கினால், எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரிவதில்லை. இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி | potato capsicum gravy recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 குடைமிளகாய்
- 1 உருளைக்கிழங்கு
- 10 முந்திரி, பாதாம்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து வேகவைத்து அதன் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- இப்போது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- சிறிது நேரம் கழித்து கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.