தமிழ்நாட்டில் அதிகம் விரும்பப்படும் உணவுவகைகள் என்றால் அது பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், வடை தான். இதில் இட்லி, தோசை, பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள வழக்கமாக சாம்பார் மற்றும் சட்னி வெரட்டிகள் தான் வைப்பார்கள். ஆனால், தமிழகத்தில் தஞ்சை, ஒரத்த நாடு, கும்பகோணம் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் கடப்பா என்றொரு ரெசிப்பி படு பேமஸ். வழக்கமாக நாம் இட்லி,தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சாம்பார், சட்னி, குருமா போன்றவற்றை செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக ஒரு ரெசிபி செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறை இருக்கும். அந்த வகையில் இன்று நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் கடப்பா ரெசிபியை சமைக்க உள்ளோம்.
இந்த கடப்பா நாம் செய்கின்ற சட்னி, சாம்பாருக்கு ஒரு நல்ல மாற்று என்று கூறலாம். இது பாசிபருப்பு, உருளைக்கிழங்கு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது தவிர சப்பாத்தி மற்றும் பூரியுடன் கடப்பா சுவையாக இருக்கும். இதனை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் செய்யலாம். சுவை அபாரமாகவும், சிறப்பாகவும் இருக்கும். பாசி பருப்பு மற்ற பருப்பு வகைகளை விட ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு, அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைத்து செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்றது. நாம் வழக்கமாக செய்யும் சாம்பாருக்கு பதிலாக இந்த கடப்பாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மணக்க மணக்க செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக மாறிப் போகும். வாருங்கள்! தஞ்சாவூர் கடப்பாவை சுவையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா | Tanjore Kadappa Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 3 உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 டீஸ்பூன் கசகசா
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 பட்டை கிராம்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 5 முந்திரி
- 5 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 பிரிஞ்சி இலை
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து உருளைக்கிழங்கையும் அதனுடன் சேர்த்து 4 விசில் வரை விட்டு நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் குக்கரை திறந்து உருளைக் கிழங்கை தனியாக எடுத்து விட்டு, பருப்பை மசித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், கசகசா, இஞ்சி பூண்டு, சோம்பு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பட்டை, கிராம்பு, மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக மசித்து சேர்த்து அதனுடன் பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- இது நன்கு கொதித்து வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தஞ்சாவூர் கடப்பா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் தஞ்சாவூர் கௌசா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!