எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை கொத்தமல்லி சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை, சிறுதானிய பணியாரம், சிறுதானிய கஞ்சி ஆகியவை மிகவும் பிரபலம்.
சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. கொத்தமல்லி என்றாலே அதற்கு ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் சாதம் செய்தால், எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினை கொத்தமல்லி சாதம் | Thinai Coriander Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கொத்தமல்லி
- 1 கப் தினை
- 10 முந்திரி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 5 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
- முதலில் தினையை நன்கு அலசி விட்டு ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதன்பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- பின் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து ஒன்று சேர கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான தினை கொத்தமல்லி சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!