பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட வைத்த பாலில் சர்க்கரை கலந்து பூரிகளை ஊற வைத்து பால் பூரி செய்யலாம். பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். அதிலும் கூடவே உருளைக்கிழங்கு மசாலா என்றால் டபுள் ஹேப்பி.
பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்கு உள்ளது. குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. சில பேருடைய வீடுகளில் பூரி சுட்டால் எவ்வளவு இருந்தாலும் பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு பூரியை விரும்புபவர்களாக இருப்பார்கள். பூரி சுடுவது சப்பாத்தி சுடுவதை விட மிக மிக எளிமையானது. பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.
பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் பீட்ரூட் சேர்த்து தான் செய்ய போகிறோம். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
பீட்ரூட் பூரி | Beetroot poori recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 பூரி கட்டை
தேவையான பொருட்கள்
- 2 கப் கோதுமை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் ரவா
- 1 பீட்ருட்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து அதன் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் ரவை சேர்த்து கலந்து கொள்ளவும். அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பீட்ரூட் சாறு, உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்பு சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- அதன்பிறகு பூரி கட்டையில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து தேய்த்து எடுக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
- அது உப்பி மேலெழும்பி வரும், அதனை மென்மையாக கரண்டியால் அழுத்தவும். பின்னர் பூரியை மறுபக்கம் திருப்பி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் பூரி தயார்.