தனியா அல்லது கொத்தமல்லி என்று அழைக்கப்படும் இந்த அற்புத மூலிகை பொருள் நம்முடைய அன்றாட உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் எந்தவொரு வீட்டு சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நிச்சயமாக கூறலாம். அந்த அளவிற்கு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ள இந்த கொத்தமல்லி ஒவ்வொரு உணவுக்கு சுவை கூட்டும். தவிர, இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அற்புதமான கொத்தமல்லியை வைத்து சுவையான தொக்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி அல்லது கடினமான செய்முறையும் இன்றி வெகு எளிதாக செய்து விடலாம். மேலும் இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. அது மட்டுமின்றி இதை ஒரு முறை செய்து கை படாமல் அப்படியே ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் இதை சுமார் ஒரு மாதம் வரை வைத்து நாம் பயன்படுத்தலாம். இன்ஸ்டன்ட் ஆக கொத்தமல்லியை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்!
ஆந்திரா கொத்தமல்லி தொக்கு | Coriander Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கட்டு கொத்தமல்லி
- 1 கப் புதினா
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 4 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் தனியா
- 1 துண்டு வெல்லம்
- புளி எலுமிச்சை அளவு
- 5 பல் பூண்டு
செய்முறை
- முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடுகு, வெந்தயம், தனியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டை தட்டி சேர்த்து வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அதன்பிறகு கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி வச்சு சுவையான ஆரோக்கியமிக்க கொத்தமல்லி பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்!