நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி சுவையும், மணமும் மட்டும் தராமல் ஏராளமான மருத்துவ குணங்களையும் தருகிறது. நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இஞ்சியை பொதுவாக சமையலில் அளவாக சேர்ப்போம். ஆனால் அந்த இஞ்சியைக் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இஞ்சி கார குழம்பு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இஞ்சி குழம்பு சாப்பிடுவது நல்லது. உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், அவ்வப்போது இஞ்சி கார குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும் இஞ்சி செயல்படுகிறது. இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. இஞ்சி உணவில் சேர்த்து கொள்ள விரும்பாதவர்கள் குழம்பு பிடிக்காதவர்கள் இஞ்சி துவையலாக செய்து சாப்பிடலாம். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி சுவைமிகுந்த கார குழம்பு செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி கார குழம்பு | Ginger Kara Kulambu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கப் இஞ்சி
- 1/2 கப் தேங்காய்
- 4 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1/4 கப் புளி கரைசல்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 துண்டு வெல்லம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பில்லை
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை
- முதலில் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் புளி கரைசல் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், இஞ்சி விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் சிறிதளவு வெல்லம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான இஞ்சி கார குழம்பு தயார். இந்த குழம்பு காய்ச்சல் வந்து போன பிறகு சாதத்துடன் சேர்த்து சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான இஞ்சி ரசம் இப்படி செய்து! பாருங்கள்! மணமணக்கும் இஞ்சி ரசத்தின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்!