பிரியாணி பிடிக்காத ஆள் யாராவது இருக்க முடியுமா? சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி பிரியாணிக்கென்றே தனி சுவையும் மணமும் உண்டு. பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சுருங்கச் சொன்னால் இதன் பெயர் ஒன்றே போதுமானது. பால்மணம் மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த வயதானவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாக இருக்கின்றனர்.
சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை.
விடுமுறையில் விதவிதமாக சமைத்து உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் கவர விரும்புறீங்களா? இதோ உங்களுக்காகவே காடை பிரியாணி ரெசிபி. மட்டன், சிக்கன், மீனில் பிரியாணி சமைத்து சலித்து போனவர்களுக்கு காடை பிரியாணி மீண்டும் உங்கள் சுவையுணர்வுகளை தூண்டிவிடும். அருமையான காடை பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
காடை பிரியாணி | Kaadai biryani recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 2 காடை
- 1 கப் பாசுமதி அரிசி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 3 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 2 தக்காளி
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1/2 கப் தயிர்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க
- 2 பச்சை மிளகாய்
- 1 கப் புதினா, கொத்தமல்லி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கறிமசாலா தூள்
செய்முறை
- முதலில் காடையை சுத்தம் செய்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கப் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், கறி மசாலாத்தூள், புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் தயிர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- அதன் பச்சை வாசனை போன பின்பு அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் காடையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 4 விசில் வரை விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான காடை பிரியாணி தயார்.