காடை முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். காடை முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் பி1 , விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ உள்ளது. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது.
இந்த குழம்பில் முட்டையுடன் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக முட்டையை வேக வைத்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதுவும் இந்த காடை முட்டை வேகவைத்தால் அப்படியா சாப்பிட பலருக்கு பிடிக்காது. ஆனால் அவித்த முட்டையை இது போல குழம்பு, குருமா போன்று செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.
காடை முட்டை குழம்பு அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் காடை முட்டை குழம்பு எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்
காடை முட்டை குழம்பு | Quail egg Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 20 காடை முட்டை
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 வெங்காயம் நறுக்கியது
- கறிவேப்பிலை சிறிது
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 தக்காளி அரைத்தது
- 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
- உப்பு தேவையானஅளவு
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- தண்ணீர் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
- குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு. மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!