உடல் சூட்டைக் குறைத்து, வலிகளை நீக்கி, நல்ல உறக்கம் தரும் எண்ணெய்க் குளியல்!

- Advertisement -

பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது வந்த மாமணிபோல வந்து பாடாகப் படுத்துகின்றன நோய்கள். சமீபகாலமாக வெப்பம் அதிகரித்து காணப்படுவதுடன் அவ்வப்போது மழை பெய்வதால் உடல் வெப்பம் அதிகரித்து பலரது கண்கள் வீங்கியும், சிவந்தும் காணப்படுகின்றன. கூடவே நீர் வடிவதுடன் வலியும் எடுக்கிறது.

-விளம்பரம்-

நந்தியாவட்டை பூ

கண்களில் வீக்கம், வலி, கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் வந்தால் நந்தியாவட்டைப் பூக்களை கண்களின்மீது வைத்து கட்டி வந்தாலே சரியாகிவிடும். மஞ்சள் தூளை நீரில் கரைத்து அதில் ஒரு மெல்லிய துணியை (பருத்தித் துணியாக இருந்தால் நல்லது) நனைத்து காய வைக்க வேண்டும். பிறகு கர்ச்சிப் பயன்படுத்துவதுபோல அவ்வப்போது கண்களைத் துடைத்து வந்தால் கண்ணில் உள்ள கிருமிகளை பரவவிடாமல் செய்யும். இத்தகைய சூழலில் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும். அதேவேளையில் எண்ணெய்க் குளியல் சளியையும் விரட்டும். ஆனால், முறைப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். சூட்டைக் குறைக்கவும் சளி, ஜலதோஷம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும் நல்லெண்ணெய்க் குளியல் நல்லது.

- Advertisement -

எண்ணெய்க் குளியல்

எண்ணெய்க் குளியல் என்றதும் சிலர் அவர்களுக்கு தெரிந்த வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். நல்லெண்ணெயை தேவையான அளவு எடுத்து அதில் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் குளிக்க வேண்டும். அப்போது குளிப்பது வெந்நீராக இருக்க வேண்டியது அவசியம். சீயக்காய் தேய்த்துக் குளித்தால்தான் எண்ணெய்ப் பிசுக்கு அகலும். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மூட்டு வலி, உடல் வலி நீங்குவதால் தூக்கம் கண்களைச் செருகும்.

மது அருந்த வேண்டாம்

காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள் அன்று பகலில் மட்டும் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. கூடவே இறைச்சி, மது, புகை மற்றும் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். காரணம் உடல் குளிர்ச்சியடைந்திருப்பதுடன் மிகவும் இலகுவாக மென்மையாக இருக்கும். அந்த நேரங்களில் இறைச்சி உண்பது, மது அருந்துவதால் அது உடலுக்கு தொல்லை கொடுத்து வேறுவிதமாகச் செயல்படும். குறிப்பாக வலுவின்மையை ஏற்படுத்தும்.

குளிர்நீரில் குளிக்காதீர்

எண்ணெய்க் குளியலை முடித்ததும் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே உண்ணவேண்டும். மோர், நீர்க்காய்கறிகள், திராட்சை, கொய்யா போன்ற குளிர்ச்சியூட்டும் பழங்கள், குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இப்படியெல்லாம் நிறைய இருக்கிறது. ஆனால், நானும் எண்ணெய்க் குளியல் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வெறும் நல்லெண்ணெயை தலையில் தேய்த்து குளிர் நீரில் குளிப்பதாலோ, எண்ணெய்க் குளியல் செய்த பிறகு பின்பற்றவேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலோ எந்த பயனும் இல்லை. எதையும் முறையாகப் பின்பற்றினால்தான் பலன் கிடைக்கும்; இல்லையென்றால் பலன் கிடைக்காததுடன் அதற்கு நேர் எதிர்மாறானவையே நிகழும்.

-விளம்பரம்-

சாம்பிராணி புகை

எண்ணெய்க் குளியல் முடித்ததும் தலை துவட்டியதும் தீக்கங்குகளில் சாம்பிராணி புகை போட்டு தலையை உலர வைப்பது நல்லது. கூடவே, மஞ்சள் தூளையும் தூவி உச்சந்தலை, பின்னந்தலை, காது பகுதிகளில் புகையைக் காட்டுவதால் அந்த இடங்களில் காணப்படும் நீரேற்றத்தை வெளியேற்றி நலம் தரும். இதுமட்டுமல்ல இன்னும் பல எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் மழை மற்றும் பனிக்காலங்களில் வரக்கூடிய உடல்நலக்கோளாறுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here