செரிமானக்கோளாறு, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் முட்டைகோஸ்!

- Advertisement -

முட்டைகோஸ் இலை வகையைச் சேர்ந்தது என்றாலும் நாம் கீரை, காய் வகையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதன் பூர்வீகம் வடக்கு சீனா மற்றும் ஐரோப்பா என்று சொல்லப்பட்டாலும் பரவலாக இது அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது. பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளைக் கொண்ட முட்டைகோஸில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆக, அடிப்படையில் முட்டைகோஸ் செரிமானக்கோளாறை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சினையையும் போக்குகிறது.

-விளம்பரம்-


ரத்தம் சுத்திகரிக்கும்


செரிமானத்தை தூண்டக்கூடிய முட்டைகோஸ் ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது. புதிய ரத்தம் ஊறுவதற்கு உதவியாக இருக்கும் முட்டைகோஸ் தாதுவை பலப்படுத்தக்கூடியது. உடல் பலம் குன்றியவர்கள் முட்டைகோஸுடன் வெங்காயம் மற்றும் மசாலா பொருள்களை பசு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி நீங்கி போதிய பலம் கிடைக்கும். நெஞ்சில் கபம் கட்டிக்கொண்டு சிரமப்படுபவர்கள் முட்டைகோஸை சமைத்துச் சாப்பிட்டு வருவதன்மூலம் நலம் பெறலாம். இருமலை மட்டுமல்ல கபத்தையும் பித்தம் தொடர்பான நோய்களையும் சரிசெய்யக்கூடியது முட்டைகோஸ்.

- Advertisement -


நோய் எதிர்ப்பு சக்தி


முட்டைகோஸை ஜூஸாக்கிக் குடித்தால் கல்லீரல் சுத்தமடைவதுடன் கொலஸ்ட்ரால் குறையும். இப்படி முட்டைகோஸ் ஜுஸின் பல்வேறு நன்மைகள் குறித்து சொல்லப்பட்டாலும் அதன் பச்சை வாசனை குமட்டலை ஏற்படுத்தும். அதனால்தான் யாரும் முகம் சுளிக்காத வகையில் முட்டைகோஸை வேக வைத்து வடிகட்டிய நீரையோ அல்லது அதை சூப்பாக செய்தோ குடித்து வரலாம். மேலும் இது அல்சரால் ஏற்படும் வயிற்றுவலியில் இருந்து மீண்டுவர பெரிதும் உதவும். இன்றைய சூழலில் பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது முட்டைகோஸ். குறிப்பாக நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் வராமல் தடுக்கும். முட்டைகோஸின் சாற்றில் காணப்படும் ஹிஸ்டிடின் என்ற சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். வைட்டமின் கே மற்றும் ஆந்தோசயானின் போன்றவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கரும்புள்ளி உள்ளிட்ட தோல் நோயால் அவதிப்படுபவர்கள், தலைவலி, இதய நோய் என பல பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் முட்டைகோஸ் சூப் அல்லது சாறு அருந்தி பலன் பெறலாம்.


மூலம், மலச்சிக்கல், பார்வைக்கோளாறு


நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறை உள்ளவர்கள் முட்டைகோஸை பொரியல் செய்து வாரத்தில் மூன்றுநாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை உணரலாம். வைட்டமின் மாத்திரைகளுக்கு இணையாக உடலுக்கு பலம் தருவதில் முட்டைகோஸ் சிறப்பான பங்களிக்கிறது. சூப், வேக வைத்த நீர் மற்றும் ஜூஸ் என பல வழிகளில் முட்டைகோஸை எடுத்துக்கொள்வதுடன் அவ்வப்போது சமைத்தும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதன் பூர்வீகம் வெளிநாடு என்று அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது. முட்டைகோஸ் பார்வை நரம்புகளை இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். மூல நோயின் பாதிப்பைக் குறைப்பதுடன் நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். வியர்வையைப் பெருக்கி சிறுநீரைப் பிரித்து நன்றாக வெளியேற்றும். சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு கொடுக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஆற்றல் முட்டைகோஸுக்கு உண்டு.


நஞ்சில்லா விளைபொருள்


முட்டைகோஸில் இத்தனை சத்துகள் நிறைந்திருந்தாலும் அது இயற்கை விவசாயத்தில் விளைந்ததாக இருக்க வேண்டும். வணிக நோக்கத்தில் செயல்படும் சிலர் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருப்பதாகவும் விளைச்சல் சரியில்லை என்றும் சில காரணங்களைக் கூறிக்கொண்டு ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தெளிக்கின்றனர். இவற்றுக்கு நடுவே இயற்கை முறை விவசாயத்தில் முட்டைகோஸ் விளைவிக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து நஞ்சில்லா அந்த விளைபொருட்களை வாங்க வேண்டும். இதன்மூலம் நல்ல நோக்கத்தில் செயல்படும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன் நமது உடல்நலமும் காக்கப்படும் என்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். நாம் உண்ணக்கூடிய உணவுப்பொருள்களில் மருத்துவ குணம் நிறைந்திருந்தாலும் அவற்றில் ரசாயனம் கலக்கப்படும்போது தரம் குறைவதுடன் புதிய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

-விளம்பரம்-

எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here