பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை பெரிய பட்டியலே போடலாம். அவற்றில் சிறப்புமிக்க பழங்களுள் ஒன்று ஏத்தம்பழம் எனப்படும் நேந்திரன் வாழை. மிதமான வாசனையும், ருசியும் கொண்ட இந்த பழத்தில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகளை சிதற விடாமல் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது இந்த நேந்திரன் வாழைப்பழம்.
உடல் எடை அதிகரிக்கும்
நேந்திரன் வாழைப்பழத்தின் சிறப்பம்சத்தை விவரித்துக்கொண்டே போகலாம். இந்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடை எடை அதிகமாகும் என்ற தகவல் பலருக்கு `இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்று பாடத் தோன்றும். ஆம்… நேந்திரன் வாழைக்கு அந்த மகத்துவம் இருக்கிறது. சிறு துண்டுகளாக்கி இட்லிப்பானையில் வைத்து வேகவைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் திடகாத்திரமாக மாறலாம்.
நரம்புத்தளர்ச்சி போக்கும்
நேந்திரன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானக்கோளாறுகள் விலகுவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும், சருமத்தைப் பொலிவாக்கி நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபட உதவும். ரத்த விருத்திக்காக ஏதேதோ மருந்துகளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் நேந்திரன் பழத்தைச் சாப்பிட்டாலே போதும். இத்தனை சிறப்புகளைக் கொண்ட நேந்திரன் வாழை கேரள மாநிலத்திலும் தமிழகத்தின் தென் கோடியான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்தான் அதிக அளவில் விளைகிறது. நேந்திரன் பழத்தில் ஜாம் தயாரிப்பதுபோல அதன் காயில் சிப்ஸ், வற்றல் தயாரிக்கப்படுகிறது. சாப்பிடச் சுவையாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும்.
தாய்ப்பால் சுரக்கும்
கேரளாவில் எல்லா காய்கறிகளையும் கொண்டு செய்யப்படும் அவியல் எனப்படும் ஒரு பதார்த்தத்தில் நேந்திரன் வாழைக்காயும் இடம்பெறும். தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அவியலில் நேந்திரன் காயும் இடம்பெறுவதால் சாப்பிடச் சுவையாக இருக்கும். நேந்திரங்காய்களை துண்டு துண்டாக நறுக்கி காய வைத்து வற்றலாக்கி எடுத்து அரைத்து மாவாக்கி குழந்தை பெற்ற தாய்மாருக்கு கஞ்சியாக செய்து கொடுப்பார்கள். தினம் ஒரு கப் வீதம் கொடுத்து வந்தால் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு குறைவின்றி பால் கிடைக்கும். இன்றைய சூழலில் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காமல் சிரமப்படும் தாய்மார் நேந்திரன் காயில் தயாரிக்கப்படும் இந்த எளிய உணவை உண்டு பலன்பெறலாம்.
ஆசனக்கடுப்பு வயிற்றுப்புண்
வளரும் குழந்தைகளுக்கு நேந்திரன் காயில் தயாரிக்கப்படும் இதே கஞ்சியை கொடுப்பதன்மூலம் அவர்கள் சீரான உடல் வளர்ச்சி பெறுவர். நேந்திரங்காய் வற்றல் சிறுநீரகத்தில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி ஆசனக்கடுப்பு, வயிற்றுப்புண்ணை ஆற்றும். அத்துடன் வாய்ப்புண், இரைப்பைக் கோளாறுகளையும் சரிசெய்யும். டி.பி எனப்படும் காசநோய் குணமடைய நேந்திரன் பழத்துடன் முட்டை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள் நன்றாகப் பழுத்த நேந்திரன் பழத்துடன் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். உணவாகவும் மருந்தாகவும் செயல்படும் இந்த நேந்திரன் பழம் சந்தையில் மிக எளிதாகக் கிடைக்கிறது.