வாழைப்பழத்தை முக்கனிகளில் ஒன்று என்று சொல்வோம். மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. வாழைப்பழத்தில் நிறைய வகைகள் இருந்தாலும் சில பழங்களுக்கு மருத்துவ குணம் அதிகம். முக்கியமாக செவ்வாழைப்பழம் இரும்புச்சத்து நிறைந்த பழமாகும். அதுமட்டுமல்ல வைட்டமின் சி, வைட்டமினி பி 6, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளை அதிகமாகக் கொண்டுள்ளது.
கண் பார்வை போக்கும்
பீட்டா கரோட்டின் சத்து நிறைந்திருப்பதால் கண் நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது. அந்தவகையில் மாலைக்கண் நோயால் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரலாம். கண் பார்வை குறைந்தவுடன் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவடையும். சுமார் 40, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். உயர்தரமான பொட்டாசியம் சத்து இதில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு போதுமான ஆற்றலைக் கொடுக்கிறது.
நரம்புத்தளர்ச்சி நீக்கி ஆண்மைக்குறை நீக்கும்
சத்துகள் பலவற்றை கொண்ட இந்த செவ்வாழைப்பழம் ஆண்மைக்குறைபாட்டினை போக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. அடிப்படையில் நரம்புத்தளர்ச்சியை போக்கக்கூடியது என்பதால் இந்தப் பழத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அந்தவகையில் திருமணமான ஆண்கள் மற்றும் ஆண்மைக்குறை உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பிறகு தேனுடன் சேர்த்து இதை சாப்பிட்டு வந்தால் போதிய பலன் கிடைக்கும். வாழைப்பழங்கள் பொதுவாக செரிமான சக்தி கொண்டவை என்பதால் உணவுக்குப்பிறகு சாப்பிடலாம் என்றாலும் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது.
சருமம் பளபளக்க உதவும்
குறைபாடு உள்ளவர்கள்தான் சாப்பிட வேண்டுமென்றில்லை; நாம் அனைவருமே தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சொறி சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் தொடர்பான நோய்கள் சரியாகும். சருமம் பளபளப்பு அடைவதுடன் முடி கருமையாகும். தொற்றுநோய் பாதிப்புகளிலிருந்தும் விடுதலை தரக்கூடிய இந்தப் பழத்தை நோய் வருமுன் காக்கும் நோக்கத்தில் சாப்பிட்டு வருவது நல்லது.
கல்லீரல் வீக்கம் போக்கும்
பழங்கள் அனைத்துமே பல் தொடர்பான நோய்களைப் போக்கக்கூடியவை. அந்தவகையில் செவ்வாழைப்பழமும் பல்வலி, பல் அசைவு போன்ற பல் நோய்களைக் குணமாக்கும். கல்லீரல் வீக்கம். சிறுநீர்க்கோளாறு என பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தது செவ்வாழைப்பழம். எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தி புதிய ரத்த அணுக்களை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. பல்வேறு நலன்களை பெற்றுத்தரும் செவ்வாழைப்பழத்தை காலையில் முதல் உணவாக உமிழ்நீருடன் சேர்த்து மென்று கூழாக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது. இப்படி முதல் உணவாக சாப்பிடுவதால் அதிலுள்ள மொத்த சத்தையும் உடல் கிரகித்துக்கொள்ளும்.
செரிமானம் தூண்டி கழிவுகள் வெளியேற்றும்
சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து காலை 7 மணி வரை முழுமையான செரிமானம் நடக்கும் என்பதால் காலை வேளையில் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலனைப் பெறலாம். இப்படி சாப்பிடுவதன்மூலம் அது குடலியக்கத்தை சீர்படுத்தி கழிவுகளை வெளியேற்ற உதவும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலக்கழிவுகள் முறையாக வெளியேற உதவுகிறது. ஆகவே, தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு நலன்களைப் பெறலாம். செவ்வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதில் மில்க் ஷேக், ஸ்மூத்தி, கேசரி, மைசூர்பாகு, சாலட், கேக் என பல விதங்களில் செய்து சாப்பிடலாம்.